Thursday, November 3, 2011

வேலாயுதம் படத்தை நானே பார்க்கவில்லை!



என் படத்தை நான் பார்ப்பதில்லை; வேலாயுதம் படத்தையும் பார்க்க மாட்டேன், என்று நடிகை ஹன்சிகா மோத்வானி கூறியுள்ளார். தெலுங்கில் ஜூனியர் என்டிஆர், கன்னடத்தில் புனித் ராஜ்குமார், இந்தியில் ஹிமேஷ் ரேஷம்மியா என ஒரு பெரிய ரவுண்ட் அடித்து எதிலும் ஜெயிக்க முடியாமல் தமிழுக்கு வந்தவர்தான் ஹன்சிகா மோத்வானி. முதல் இரண்டு படங்கள் தோல்வியை கொடுத்தாலும், மூன்றாவது படமான வேலாயுதம் முதன் முதலாக அம்மணிக்கு வெற்றியை கொடுத்திருக்கிறது.

இப்போது கோடம்பாக்கத்தில் திரும்பிய பக்கமெல்லாம் ஹன்ஸிகா புராணம்தான். அம்மணியின் தாராளம், தயாரிப்பாளர்களிடம் அனுசரணையாகப் போவது, சம்பளத்தில் அட்ஜஸ்ட்மெண்ட் என நிறைய புகழ்பாடிக் கொண்டிருக்கிறார்கள். வேலாயுதம் தந்த சந்தோஷத்தில் மிதக்கும் ஹன்ஸிகா, இன்னும் அந்தப் படத்தைப் பார்க்கவே இல்லையாம். இதுபற்றி அவர் அளித்துள்ள பேட்டியில், "நான் என் படத்தை பெரிய திரையில் பார்க்கவே மாட்டேன். இதுவரை நான் நடித்த எந்தப் படத்தையும் பார்த்ததில்லை. இனிமேலும் பார்க்க மாட்டேன். வேலாயுதம் படத்தையும் பார்ப்பதாக இல்லை. நான் மிகப் பெரிய விமர்சகர். என்னைப் பார்த்து நானே கோபப்படும்படி ஆகிவிட்டால்?  என்ன செய்வது.

ஆனால் என் அம்மா, நண்பர்கள் பார்த்துவிட்டு ஆஹா, ஓஹோ என்று பாராட்டினார்கள். இந்தப்படத்தின் விமர்சனங்களைப் படித்து வருகிறேன். என்னை இந்த அளவு திறமையாக பயன்படுத்திய ஜெயம் ராஜா, விஜய்க்கு எப்படி நன்றி சொல்வதென்றே தெரியவில்லை, என்று கூறியுள்ளார்.

தற்போது உதயநிதியுடன், "ஒரு கல் ஒரு கண்ணாடி", சிம்புவுடன் "வேட்டை மன்னன்" படங்களில் நடித்து வரும் ஹன்ஸிகா, இவை இரண்டுமே நிச்சயம் வெற்றிப் படங்களாக இருக்கும் என்று உறுதியாக கூறுகிறார்.
Share