Saturday, March 19, 2011

விஜய்க்கு குஷ்பு எச்சரிக்கை !

அரசியலுக்கு வந்தால் கஷ்டத்தை சந்திக்க வேண்டியிருக்கும் என்று அரசியல் ஆசையில் இருக்கும் நடிகர் விஜய்க்கு, நடிகை குஷ்பு எச்சரிக்கை விடுத்துள்ளார். நடிகர் விஜய் வரும் தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவாக பிரசாரம் செய்வார் என்றும், அதிமுகவுக்கு ஆதரவாக அறிக்கை மட்டுமே விடுப்பார் என்றும் இருவேறு கருத்துக்கள் நிலவி வருகின்றன. அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரோ... இந்த தேர்தலுக்கு பிறகு விஜய் தனிக்கட்சி தொடங்கி, முழுநேர அரசியலில் ஈடுபடுவார் என்று கூறி வருகிறார்.

இந்நிலையில் விஜய்யின் அரசியல் பிரவேசம் பற்றி சமீபத்தில் தி.மு.க.வில் தன்னை இணைத்துக் கொண்ட நடிகை குஷ்பு அளித்த பேட்டியில், மக்கள் பணிகளில் ஈடுபட விரும்பும் யாரும் அரசியலில் ஈடுபடலாம். விஜய்யும் தாராளமாக வரலாம். ஆனால் சினிமா வேறு அரசியல் வேறு என்பதை உணர வேண்டும். சினிமாவில் நடிக்கும்போது ரசிகர்கள் கைதட்டுவார்கள். விசில் அடித்தும் ரசிப்பார்கள். அவர்கள் எல்லோருடைய ஓட்டும் நமக்குத்தான் விழும் என்று எதிர்பார்த்து அரசியலுக்கு வரக்கூடாது. சினிமாவை விட அரசியல் உண்மையிலேயே கஷ்டமான விஷயம்தான், என்று கூறியுள்ளார்.

நடிகை குஷ்பு திமுகவில் இணைந்த நாள் முதலே கட்சிப்பணிகளை ஆற்றத் தொடங்கி விட்டார். அவருக்கு இந்த தேர்தலில் ஆயிரம்விளக்கு தொகுதியில் போட்டியிட சீட் கிடைக்கும் என்று கூறப்பட்டது. ஆனால் கடைசியில் அவருக்கு சீட் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 
Share