Wednesday, December 21, 2011

சோஹன் ராயை கைது செய்ய வேண்டும்! மன்சூர் அலிகான் கோரிக்கை!!

தேச ஒற்றுமைக்கு குந்தகம் ஏற்படும் வகையில் டேம் 999 படத்தை எடுத்து வெளியிட்ட டைரக்டர் சோஹன் ராயை கைது செய்ய வேண்டும் என்று நடிகர் மன்சூர் அலிகான் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக மன்சூர் அலிகான் அளித்துள்ள பேட்டியில், டேம் 999 படம் மூலம் தமிழக, கேரள மக்களிடையே மோதல் ஏற்பட்டுள்ளது. முல்லைப் பெரியாறு அணையை கட்டிய பென்னி குயிக் 999 வருடங்கள் அணை பாதுகாப்பாக இருக்கும் என்றுதான் ஒப்பந்தம் போட்டுள்ளார். அணை பலவீனமாக உள்ளது, உடைக்க வேண்டும் என்ற துரோக எண்ணத்தோடு சோஹன்ராய் டேம் 999 படத்தை எடுத்து வெளியிட்டுள்ளார். அவரால் கேரளாவில் தமிழர்கள் தாக்கப்பட்டு விரட்டியடிக்கப்படுகின்றனர். தேச ஒற்றுமைக்கு இந்த படத்தினால் தான் குந்தகம் ஏற்பட்டு உள்ளது. எனவே உள்நோக்கத்தோடு இப்படத்தை எடுத்த சோஹன் ராயை கைது செய்து ஜெயிலில் அடைக்க வேண்டும்.

முல்லைப் பெரியாறு அணையை கட்டிய என்ஜினீயரை ஊழல்வாதி போல் அந்த படத்தில் சித்தரித்து உள்ளனர். தனது சொத்துக்களை விற்று அணையை கட்டிய பென்னி குயிக்கை, இது போல் களங்கபடுத்தி இருப்பது கண்டிக்கத்தக்கது. சென்னையிலும் முல்லைப் பெரியாறு அணை பகுதியிலும் பென்னி குயிக்குக்கு சிலை வைக்க வேண்டும். 5 மற்றும் 6-வது வகுப்பு பாடத்தில் பென்னி குயிக் அணை கட்டிய விவரங்களை இடம் பெறச் செய்ய வேண்டும், என்று கூறியுள்ளார்.
Share