Tuesday, December 20, 2011

நல்ல பாடல்களுக்கு ரசிகர்களின் ஆதரவு எப்போதும் இருக்கும் : ஜீ.வி.பிரகாஷ்!

நல்ல பாடல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் எப்போதும் ஆதரவு கிடைக்கும் என்று இளம் இசையமைப்பாளர் ஜீ.வி.பிரகாஷ் குமார் கூறியுள்ளார். ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மானின் அக்கா பையன் எனும் அடையாளத்தோடு, தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்தவர் ஜீ.வி.பிரகாஷ் குமார். குறுகிய காலத்திலேயே பெரிய, பெரிய ஹீரோக்களின் படங்களுக்கு இசையமைத்து, இப்போது டாப்-5 இசையமைப்பாளர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டு இருக்கிறார்.

வெயிலில் தொடங்கி முப்பொழுதும் உன் கற்பனைகள் படம் வரை, 23 படங்களுக்கு இசையமைத்து இருக்கும் ஜீ.வி.பிரகாஷ் குமார் நம்மிடம் பேசிய போது, ஒவ்வொரு படத்திற்கு இசையமைக்கும் போதும், அந்த படத்தை என்னுடைய முதல்பட வாய்ப்பாகவே கருதி இசையமைக்கிறேன். நல்ல பாடல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆதரவு கிடைக்கும் என்பதை உணர்ந்துள்ளேன். இதன்மூலம் ரசிகர்களின் ரசனையையும் என்னால் புரிந்து கொள்ள முடிகிறது என்று கூறியுள்ளார்.

முப்பொழுதும் உன் கற்பனைகள் படத்திற்கு பிறகு மீண்டும் விஜய், விக்ரம் கூட்டணியான தாண்டவம் படத்திற்கு இசையமைக்கிறார். அதனைத்தொடர்ந்து இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் அன்னக்கொடியும் கொடிவீரனும் படத்திலும் கமிட் ஆகியுள்ளார். அனேகமாக பாரதிராஜா படம் ஜீ.வி.,யின் 25வது படமாக இருக்கலாம்.
Share