Saturday, November 5, 2011

பாலா இயக்கத்தில் மீண்டும் விக்ரம்?

'அவன் இவன்' படத்தைத் தொடர்ந்து பாலா அடுத்து இயக்க இருக்கும் புதிய படத்தில் முரளி மகன் அதர்வா ஹீரோவாக நடிக்க தேர்வு செய்யப்பட்டிருப்பதாக வெளியாகி வரும் செய்திகளில் பாதி அளவுதான் உண்மை என்கிறார்கள் பாலா அலுவலக வட்டாரத்தில். அதுவும் அதர்வாவுக்கு விரைவில் ஸ்கீரின் டெஸ்ட் எடுக்க இருக்கிறாராம் பாலா. அந்த பரிசோதனையில் அதர்வா ஒழுங்கா நடிக்கவில்லை என்றால் ஏற்கனவே தேர்வு செய்து வைத்திருக்கும் புதுமுகத்தை பயன்படுத்த முடிவு செய்து இருக்கிறாராம். 

இந்தப் புதுமுகப்பையன் மு.க. அழகிரியின் உறவினர் என்றும் தெரியவருகிறது, இவர் அனுபம் கெர் நடிப்புப் பள்ளியிலும், மும்பை 'விஸ்லிங் வுட்' திரைப்படக் கல்லூரியிலும் நடிப்பு படித்தவராம். ஆனால் அதர்வா இந்த வாய்ப்பை தவற விடமாட்டார், என்கிறார்கள். இதற்கிடையில் தற்போது இன்னோரு அதிரடியான ஹாட் தகவலும் பாலா அலுவலக வட்டாரத்தில் இருந்து கிடைக்கிறது.. பாலாவின் புதிய படத்தில் விக்ரமும் நடிக்க இருக்கிறார். இவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார் என்கிறார்கள். 

பொதுவாக தனது படங்களில் பணி புரியும் தொழில்நுட்பக் கலைஞர்களை மாற்ற விரும்பாதவர் பாலா. ஆனால் தற்போது புதிய டீமை அமைத்து வருகிறார். 'நான் கடவுள்', 'அவன் இவன்' ஆகிய படங்களில் படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய ஆர்தர்.ஏ.வில்சன் பாலாவுக்கு மிகவும் பிடித்தமான ஒளிப்பதிவாளர். ஆனால் தற்போது பாலாவின் டீமில் அவர் இல்லை. இயக்குநர் பாலாஜி சக்திவேலுக்கு மிகவும் பிடித்த ஒளிப்பதிவாளரான செழியனை புதிய படத்துக்கு  ஒளிப்பதிவாளராக நியமித்துள்ளார். இவர் கடைசியாக 'ரெட்டச்சுழி' படத்துக்கு ஒளிப்பதிவு செய்தார். அதேபோல பாலா படத்தின்  எடிட்டராக சுரேஷ் அர்ஸ் தொடர்ந்து பணியாற்றி வந்தார். தற்போது அவருக்கு பதிலாக 'ஆடுகளம்' படத்துக்காக தேசிய விருது பெற்ற எட்டிட்டர் கிஷோரை  நியமித்துள்ளார். இதற்கெல்லாம் உச்ச பச்ச அதிரடியாக யுவனுக்கு பதிலாக ஜீ.வி.பிரகாஷ் இசையை பெரிதும் நம்பி அவரை அமர்த்திக் கொண்டிருக்கிறார். தற்போது கதாநாயகி தேர்வில் தீவிரமாக இருக்கிறார் பாலா. புதுசு புதுசா கலக்குறீங்க சரி.... க்ளைமாக்ஸ மட்டும் மாத்தமாட்டேன்றீகளே ஏன்?
Share