Friday, November 18, 2011

திருமணத்துக்கு பிறகு பொறுப்பு கூடியிருக்கிறது! கார்த்தி

திருமணத்துக்கு பிறகு எனக்கு பொறுப்பு கூடியிருக்கிறது, நேரத்துக்கு வீட்டுக்கு போகிறேன் என்று நடிகர் கார்த்தி கூறியுள்ளார். முதல் படமான பருத்திவீரன் முதல் கடைசியாக வெளிவந்த சிறுத்தை வரை தேர்ந்தெடுத்து ஹிட் கொடுக்கும் கோடம்பாக்கத்தின் லேட்டஸ்ட் நம்பிக்கை நட்சத்திரம் கார்த்தி, தற்போது சகுனி படத்தில் நடித்து வருகிறார். திருமணத்துக்கு பிறகு நடிக்கும் முதல் படமான இப்படம் குறித்து கார்த்தி கூறுகையில், சகுனி முழுக்க வேற மாதிரியான படம். மகாபாரதத்துல கிருஷ்ணருக்குப் போட்டியா வருபவர் சகுனி. அவர் வர்ற எல்லா இடங்களுமே கலகலப்பா இருக்கும். அவர் யார் தலையையாவது உருட்டிக்கிட்டே இருப்பார். ஆனா அவர் டென்ஷன் ஆக மாட்டார். படத்துல அவ்வளவு தந்திரங்கள் இருக்கு. கிராமத்துல இருந்து நகரத்துக்கு வர்ற என்னோட பயணம்தான் கதை. ஆனா படத்துல நான் சந்திக்கிற மனிதர்கள், சம்பவங்கள், பிரச்னைகள், அதுக்கான தீர்வுகள்னு நிறைய விருந்து ரசிகர்களுக்காகக் காத்திருக்கு. நாசர் சார், கோட்டா சீனிவாசராவ், ராதிகா, ரோஜா, மும்தாஜ்னு அவ்வளவு கேரக்டர்கள் இருக்காங்க. இவங்களுக்கு இந்த சகுனியால என்னென்ன பிரச்னைகள் வருது, அதுக்கு எப்படித் தீர்வு கிடைக்குதுன்னு சொல்லியிருக்கோம். படத்துல நிறைய அரசியல் இருக்கு. ஆனா இது அரசியல் படமில்லை, என்றார்.

திருமண வாழ்க்கை குறித்து கூறியிருக்கும் கார்த்தி, பொதுவாகவே நான் ஷூட்டிங் முடிஞ்சா நேரா வீட்டுக்குப் போற டைப்தான். ஆனா இதுக்கு முன்னாடி ஷூட்டிங் எத்தனை மணிக்கு முடிஞ்சாலும் அதைப் பற்றியெல்லாம் பெருசா கவலை ஏதும் இருக்காது. ஆனா, இப்போ அப்படி இருக்க முடியலை. நமக்காக ஒருத்தி வீட்ல காத்துக்கிட்டு இருக்கான்னு உள்மனசுல அலாரம் அடிக்கும். ஷூட்டிங் சமயத்துல 11 மணியைக் கடந்து போகும். நான் வீட்டிற்குப் போகும் வரைக்கும் ரஞ்சனி சாப்பிடாமல் காத்துக்கிட்டிருக்கிறது இன்னும் கவலையைத் தரும். அதனால சீக்கிரமா முடிச்சிட்டு வீட்டுக்குப் போகணும்னு இன்னும் பொறுப்புகள் கூடியிருக்கு, என்று கூறியுள்ளார். 
Share