டைரக்டர் சசிகுமார் அடுத்து நடிக்கவிருக்கும் புதிய படத்தை டைரக்டர் ஜி.என்.ஆர்.குமாரவேலன் இயக்கப்போகிறார். யுவன் யுவதி படத்தை இயக்கியவர்தான் இந்த குமாரவேலன். போராளி படம் கிட்டதட்ட முடிந்துவிட்ட நிலையில், அடுத்து சசிக்குமார் நடிக்கும் படம் எது? மீண்டும் சசி, சமுத்திரக்கனி சேர்வார்களோ? என்றெல்லாம் பேசி வந்த ரசிகர்களுக்கு புதிய செய்தி, இந்த காம்பினேஷன் இப்போதைக்கு இல்லை என்பதுதான். சசிகுமார் இயக்குவதாக இருந்த படமும் இப்போதைக்கு இல்லையாம்.
அதாகப்பட்டது, சமீபத்தில் வெளிவந்த யுவன் யுவதி படத்தை இயக்கிய ஜிஎன்ஆர் குமாரவேலன் இயக்கத்தில் நடிக்கப் போகிறாராம். சுப்ரமணியபுரம், நாடோடிகள் படத்திற்கு பிறகு இவர் மீது விநியோகஸ்தர்கள் மத்தியில் தாறுமாறான நம்பிக்கை பிறந்தது. ஆனால் ஈசன் படம் வந்து அவற்றை அழித்திருந்தாலும், மீண்டும் வெற்றியை நிலைநாட்டி ரசிகர்களை மகிழ வைப்பேன் என்று சூளுரைக்காத குறையாக செயல்பட்டார் அவர். அவரது நம்பிக்கையை முற்றிலும் நிறைவேற்றும் விதமாக உருவாகியிருக்கிறதாம் போராளி. மறுபடியும் ஒரு ஈசன் எஃபெக்ட் வந்து தன்னை எந்த நேரத்திலும் முடக்கிவிட கூடாது என்று முடிவெடுத்த சசி, அதே எண்ணத்தோடு கேட்ட கதைதானாம் இது. தோல்விப்படத்தை இயக்கியவர் என்றாலும் குமாரவேலன் மீது நம்பிக்கை வைத்து கால்ஷீட் கொடுத்திருக்கிறார் சசி.