Tuesday, March 22, 2011

அவுஸ்திரேலியாவை வீழ்த்தும் திறமை எங்களிடம் உள்ளது: யுவராஜ்

காலிறுதியில் அவுஸ்திரேலிய அணியை வீழ்த்த அதிக வாய்ப்பு உள்ளது என இந்திய வீரர் யுவராஜ் சிங் தெரிவித்துள்ளார். லீக் சுற்று முடிந்த நிலையில் வரும் 24 ம் திகதி ஆமதாபாத்தில் நடக்கவுள்ள லீக் போட்டியில் இந்திய அணி "நடப்பு சாம்பியன்" அவுஸ்திரேலியாவுடன் மோதுகிறது. உலக கிண்ண அரங்கில் இந்தியா, அவுஸ்திரேலியா அணிகள் 9 முறை மோதியுள்ளன.
இதில் அவுஸ்திரேலியா 7, இந்தியா 2 போட்டியில் வெற்றி கண்டன. கடந்த 2003 ல் நடந்த பைனலில் அவுஸ்திரேலிய அணி கங்குலி தலைமையிலான இந்தியாவை வீழ்த்தி கோப்பை வென்றது. இருப்பினும் சமீபத்தில் பெங்களூருவில் நடந்த பயிற்சி போட்டியில் இந்தியாவிடம் அவுஸ்திரேலியா தோல்வி அடைந்தது.
இதுகுறித்து இந்திய ஆல் ரவுண்டர் யுவராஜ் சிங் கூறியதாவது: லீக் சுற்றில் இந்தியா, அவுஸ்திரேலியா அணிகள் தலா 4 வெற்றியை பதிவு செய்தன. எனவே வரும் 24 ம் திகதி நடக்கும் போட்டியில் முழுதிறமையை வெளிப்படுத்தும் அணிக்கு வெற்றி வாய்ப்பு அதிகம்.
ஒருநாள் போட்டிக்கான ரேங்கிங்கில் அவுஸ்திரேலிய அணி நம்பர் 1 இடத்தில் உள்ளது. கடந்த மூன்று உலக கிண்ணத் தொடரில் அவுஸ்திரேலிய அணி சாம்பியன் கோப்பை வென்றது. இதனை மறுக்க முடியாது.
ஆனால் அப்போது மெக்ராத், வார்ன், கில்கிறிஸ்ட் உள்ளிட்ட ஜாம்பவான்கள் அணியில் இடம் பெற்றிருந்தனர். தவிர அவுஸ்திரேலிய கப்டன் ரிக்கி பாண்டிங் பார்மின்றி தவித்து வருவது இந்தியாவின் வெற்றிக்கு கூடுதல் நம்பிக்கை அளித்துள்ளது. எனவே காலிறுதியில் அவுஸ்திரேலிய அணியின் பலவீனத்திற்கேற்ப திட்டமிட்டு வெற்றி பெற முயற்சிப்போம்.
ஷார்ட் பிட்ச் பந்துகளில் இந்திய பேட்ஸ்மேன்கள் திணறி வருகின்றனர் என்பதை ஏற்றுக் கொள்ள முடியது. அப்படி திணறி இருந்தால் டெஸ்ட் ரேங்கிங்கில் நம்பர் 1 ஒருநாள் போட்டி ரேங்கிங்கில் நம்பர் 2 இடத்தை அடைந்திருக்க முடியாது.
அவுஸ்திரேலிய அணியில் திறமையான வேகப்பந்து வீச்சாளர்கள் உள்ளனர். இவர்கள் எளிதில் விக்கெட் வீழ்த்தக் கூடிய திறமை படைத்தவர்கள். இதற்கேற்ப பயிற்சி மேற்கொண்டு இவர்களது பந்துவீச்சை எளிதாக சமாளிப்போம்.
இந்திய அணி உலக கோப்பை வெல்ல வேண்டும் என்பது இந்தியர்களின் கனவு. எனவே அவுஸ்திரேலியா, இலங்கை, பாகிஸ்தான் உள்ளிட்ட முன்னணி அணிகளை வீழ்த்தி கோப்பை வெல்வதை பெருமையாக கருதுகிறேன். வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக சதம் கடந்து எழுச்சி கண்டது மகிழ்ச்சி அளிக்கிறது.
இப்போட்டியில் எனது திறமையை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் களமிறங்கினேன். முழுதிறமையை வெளிப்படுத்தி சதம் கடந்து வெற்றிக்கு வித்திட்டேன். இந்த பார்ம் அடுத்து வரவுள்ள காலிறுதி உள்ளிட்ட நாக்அவுட் சுற்றில் தொடர விரும்புகிறேன்.
அம்பயர் அவுட் கொடுக்காமலே சச்சின் வெளியேறியது அவரது பெருந்தன்மையை காட்டுகிறது. இதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை. அவுட் என்று தெரிந்ததால் அம்பயரின் தீர்ப்பை அவர் எதிர்பார்க்கவில்லை. இது அவரது தனிப்பட்ட முடிவு. எனவே இதுகுறித்து அதிகம் பேச விரும்பவில்லை. இவ்வாறு யுவராஜ் சிங் கூறினார்.
Share