Saturday, January 21, 2012

என் ஆசை நண்பன் படத்தில் நிறைவேறியிருக்கிறது : விஜய் பேட்டி...!

தன்னை வித்தியாசமாக பார்க்க வேண்டும் என்ற ஆசை, நண்பன் படம் மூலம் நிறைவேறி இருக்கிறது என்று விஜய் கூறியுள்ளார். நடிகர் விஜய்க்கு இந்தாண்டு துவக்கமே சிறப்பான ஆண்டாக அமைந்துள்ளது. அவரது நண்பன் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பும், வசூலையும் பெற்றுள்ளது. இதனால் ரொம்பவே உற்சாகத்தில் இருக்கிறார் விஜய். அந்த உற்சாகத்தோடு சென்னையில் நிருபர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், 3-இடியட்ஸ் படம் என்னை ரொம்பவே கவர்ந்து விட்டது. அதனால் அந்தபடத்தில் நடிக்க ஆசைப்பட்டேன். அதற்கேற்றாறு போல டைரக்டர், தயாரிப்பாளர் என அனைத்தும் அமைந்ததால் நண்பன் படத்தில் நடித்தேன். படமும் நன்றாக வந்துள்ளது. எல்லா தியேட்டர்களிலும் நல்ல வசூல் என்று செய்திகள் வருகிறது. இதை கேட்கும்போது சந்தோஷமாக இருக்கிறது.

பொதுவாக என்னுடைய படத்தில் பஞ்ச் டயலாக்குகளை திணிக்க விரும்ப மாட்டேன். அதேசமயம் சீன்களுக்கு தேவைப்பட்டால் மட்டுமே பேசுவேன். அதேபோல் என்னுடைய படத்தில் அதிரடி காட்சிகளும் இருக்கும். அதில் ஒரு வகையான ஹீ‌ரோயிசம் தெரியும். ஆனால் நண்பன் படம் அப்படியில்லை. பஞ்ச் டயலாக் கிடையாது, அதிரடி கிடையாது. அது ஒரு வித்தியாசமான கேரக்டர். என்னை வித்யாசமாக பார்க்க வேண்டும் என்று ரொம்ப நாளா ஆசைப்பட்டேன். அது நண்பன் படம் மூலம் நிறைவேறியிருக்கிறது என்றார்.

மேலும் அவர் பேசுகையில், என்னை எனது அப்பா டாக்டராக்க ஆசைப்பட்டார். ஆனால் எனக்கோ நடிப்பில் தான் ஆர்வம் இருந்தது. அதனால் சினிமாவுக்கு வந்துவிட்டேன். அதேபோல் ஒவ்வொரு பெற்றோரும் அவர்களது பிள்ளைகள் எந்த துறையில் ஆர்வம் காட்டுகிறார்களோ, அதில் அவர்கள் செல்ல அனுமதிக்க வேண்டும் என்று கூறினார்.
Share