Friday, January 27, 2012

நண்பன் படத்திற்கு எதிராக உண்ணாவிரத போராட்டம்!

நடிகர் விஜய் நடித்த "நண்பன் படத்தில் ஆண்டி, பண்டாரம் என ஜாதியின் பெயரை குறித்து வசனங்கள் வருவதால், அவற்றை நீக்கக் கோரி விரைவில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த தமிழ்நாடு மிகப் பிற்படுத்தப்பட்டோர் நலக் கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது. திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் சந்திரசேகர், இயக்குனர் ஷங்கர் மற்றும் தணிக்கைக் குழு உறுப்பினர்களுக்கு அக்கூட்டமைப்பின் தலைவர் சேம நாராயணன் அனுப்பியுள்ள கடிதம்: மிகவும் பிற்படுத்தப்பட்டோர் சமுதாயத்தை சேர்ந்த ஆண்டி, பண்டார சமூகத்தினர்கள் தமிழகத்தில் பரவலாக உள்ளனர். அவர்கள் கல்வி, வேலை வாய்ப்புகளைப் பெற்று வாழ்ந்து வருகின்றனர்.

நண்பன் திரைப்படத்தில் சில காட்சிகளில் ஆண்டி, பண்டாரம் என ஜாதியின் பெயரை குறித்து வரும் வசனங்கள் அச்சமுதாய மக்கள் மனம் புண்படும் அளவிற்கு அமைந்துள்ளது. ஆண்டி என்றும், பண்டாரம் என்றும் வரும் அந்த வார்த்தைகளையும், பாரி, பூரி, கக்கூஸ் நாரி என்ற வார்த்தைகளையும் அப்படத்தில் இருந்து நீக்க வேண்டும். அந்த வசனத்தை நீக்கவில்லை என்றால் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம். இவ்வாறு கடிதத்தில் கூறியுள்ளார்.
Share